மகளிர் தினம் கட்டுரை

ulaga magalir thinam katturai in tamil

வீட்டுக்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும். மார்ச் 8ஆம் திகதி பாலின் சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக வருடம் தோறும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மகளிர் தினம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சமத்துவத்தின் வெளிப்பாடு
  • மகளிரின் அதிகாரங்கள்
  • சமூக வளர்ச்சியில் மகளிரின் பங்கு
  • சர்வதேச அங்கிகாரம்
  • முடிவுரை

முன்னுரை

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் தான் இதுவாகும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண் வயிற்றில் பிறந்து பெண்ணால் வளர்க்கப்பட்டு பெண்ணோடு வாழ்பவர்கள் தான் எனினும் பெண்ணின் துயரங்களையும் விருப்பங்களையும் உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை.

இத்தினத்தில் பெண்கள் தமக்காக புதிய பாதையில் தைரியமாக முன்னேறி செல்வது தான் இதன் நோக்கமாக உள்ளது. இது ஒவ்வொரு பெண்களுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை அங்கிகாரம் என்றே கூறலாம்.

சமத்துவத்தின் வெளிப்பாடு

நிறவேறுபாடுகள், பிரதேச வாதம், இனவாதம், மதவாதம் போன்றே ஆணாதிக்க கோட்பாடுகள் பெண்களை அடிமைகள் போல நடாத்தி வந்தன. இதனால் சமூகத்தில் பெண்கள் பல அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டு வந்தார்கள்.

இந்த நடைமுறையானது இன்று பெருமளவு மாறியுள்ளது. பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள். அவர்களது சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கும் படியாக சட்ட நடைமுறைகள் இன்று அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே இந்த சமுதாயம் சரியான பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது.

மகளிரின் அதிகாரங்கள்

ஆண்களுக்கு கிடைக்க கூடிய அத்தனை அதிகாரங்களும் இன்று பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பழமையான கோட்பாடுகள் மற்றும் சமூக வழக்கங்களை காரணமாக கொண்டு பெண்களை அடக்குமுறை செய்வது இன்று வெகுவாக குறைந்துள்ளது.

பெண்களுக்கு சுதந்திரமாக விரும்பிய இடத்தில் வாழவும் அவர்கள் விரும்பிய துறையை தெரிவு செய்து கல்வி கற்கவும் அத்துடன் தமக்கு விரும்பிய துறையில் வேலை செய்யவும் ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கவும் உயர்வான அங்கிகாரம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

சமூக வளர்ச்சியில் மகளிரின் பங்கு

இன்றைய சமூக மட்டங்களில் சமூக நல குறிகாட்டிகள் அதிகரித்துள்ளமையால் பெண்கள் தங்கள் திறமைகளை அனைத்து துறைகளிலும் வெளிப்படுத்துகின்றனர். கல்வியில் உயர்வான இடங்களுக்கு செல்கின்றனர்.

விளையாட்டிலும் சாதனை படைக்கின்றனர். குடும்பங்களை தலைமை தாங்கி நடத்துகின்றனர். நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு இன்று பல மடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறான சமூக மாற்றமானது இன்று உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச அங்கிகாரம்

எவ்வாறாக இருப்பினும் இன்று வரை சில நாடுகளில் சில இடங்களில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு எதிராக பெண்கள் இன்று குரல் கொடுத்து வருகின்றனர்.

மகளிர் சமத்துவத்தை முழு உலகுக்கும் தெரியப்படுத்துவதற்காக உலக பெண் தலைவர்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். இதனால் தான் மகளிர் தினமானது வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

முடிவுரை

ஒரு சமூகம் அல்லது நாடானது பெண்களுக்கான சிறந்த பாதுகாப்பு மற்றும் வள வாய்ப்புக்களை வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மகளிர் உரிமைகளை அதிகம் பாதுகாத்து வருகின்றன.

அதே சமயம் அபிவிருத்தி அடைந்து வருகின்ற மற்றும் அடையாத நாடுகள் பெண்கள் விவகாரங்களில் சற்று ஆபத்தான புள்ளி விபரங்களை காட்டுகின்றன.

You May Also Like:

பெண்மை பற்றிய கட்டுரை

தற்காப்பு கலையில் பெண்கள் கட்டுரை